சொல்லைக் கல்லாக்கி…
கவிதையைக் கவண் ஆக்கி…
வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி…
வாலி வாசித்தது கவிதை..
இல்லை..!
வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று.. அது இது… கவியரங்கம் தொடங்கு முன் – ஒரு
கண்ணீர் அஞ்சலி…🥲💐🙏
ஒரு புலிப் போத்தை ஈன்று
புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு;
அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி
வேறு பேறுண்டோ, எனது வாய்க்கு?
மாமனிதனின்
மாதாவே! – நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று – உன்
சூலில் நின்று – அன்றே,,
தமிழ் ஈழம்…! தமிழ் ஈழம் என்றது; உன் – பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை – ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டுவேன் என்று… சூளுரைத்து – சின்னஞ் சிறு தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் – அது நிலாச் சோறு தின்னாமல் – உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் –
சூடும் சொரணையும் வர, சூரியச் சோறு தின்றது;
அம்மா…!
அதற்கு நீயும் – அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே-
இனச் சோறும் ஊட்டினாய்;
நாட்பட – நாட்பட – உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!
‘தம்பி! தம்பி!’ என
நானிலம் விளிக்க நின்றான் – அந்த நம்பி;
ஈழம் வாழ் – இனம் இருந்தது – அந்த…
நம்பியை நம்பி; அம்மா!
அத்தகு – நம்பி குடியிருந்த கோயிலல்லவா – உன் கும்பி!
சோழத் தமிழர்களாம்,
ஈழத் தமிழர்களை…
ஓர் அடிமைக்கு ஒப்பாக்கி;
அவர்களது உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை – செப்பாக்கி;
அவர்கள் வாழ்வை-
வெட்ட வெளியினில் நிறுத்தி வெப்பாக்கி;
மான உணர்வுகளை மப்பாக்கி;
தரும நெறிகளைத் தப்பாக்கி – வைத்த காடையரை வீழ்த்த…!
தாயே..! உன் தனயன் தானே – தந்தான்
துப்பாக்கி!
‘இருக்கிறானா? இல்லையா?’
எனும் அய்யத்தை எழுப்புவது இருவர்;
ஒன்று! – பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று! ஈழத்தமிழர்க்கு – அரும்பொருள் ஆன பிரபாகரன்!
அம்மா!
இந்த அவல நிலையில் – நீ…
சேயைப் பிரிந்த தாயானாய்; அதனால் –
பாயைப் பிரியாத நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி…
விமானம் ஏறி –வந்தாய் சென்னை;
அது – வரவேற்கவில்லை உன்னை!
வந்த வழிபார்த்தே – விமானம் திரும்பியது; விமானத்தின் விழிகளிலும் நீர் அரும்பியது!
இனி…..!
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் – எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித்தாயே! – இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ – நிரந்தரமாய் மூடிக் கொண்டாய் விழி; உனக்குத் தங்க இடம்தராத – எங்கள்
தமிழ்மண் – நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி !
கவியாக்கம்:-
தமிழக கவிஞர் வாலி.
