
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை அள்ளிக்கொட்டிவருவதாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றையதினம் கே.வி.தவராசா தலைமையிலான மாற்று தமிழரசு சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய அரசியலில் இதுவரை இல்லாதவாறு பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்து, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான களங்களை திறப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றன.
அதனை வெளிப்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. அதன் அடிப்படையிலும் நாங்கள் தேர்தலில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்ற ரீதியில் களம் இறங்கி உள்ளோம் என பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் களமிறக்கபட்டவரிற்கு இந்திய சினிமா தயாரிப்பு நிறுவனமாக லைக்கா கோடிகளில் பணத்தை குவித்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலிலும் சங்கு சின்ன வேட்பாளர்களிற்கு பெருமளவு பணம் தேர்தல் செலவிற்கென வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் களமிறக்கபட்டவரிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொ.ஜங்கரநேசன் தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது