
மருதங்கேணி – பருத்தித்துறை வீதியில், அண்ணளவாக ஒரு கிலோ மீட்டர் தூரம் கொண்ட வீதியை புனரமைக்க 8 கோடியே 2 இலட்சத்து 92 ஆயிரம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இவ்வீதி தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடுக்கவிருப்பதாகவும் வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
முரளிதரன் தனது இல்லத்தில் நேற்று (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மருதங்கேணி தொடக்கம் அம்பன் வரையான 16 கி.மீ. தூரம் கொண்ட வீதி பயணிக்க முடியாத நிலையில் சிதைவடைந்து காணப்படுகிறது.
வைத்திய தேவைகள், வியாபார நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப்பட்ட தொடர் கோரிக்கைகளால் வீதி திருத்தும் பணிக்கு நிதி வந்ததாக தெரிவிக்கப்படும்போதும் வீதி இன்னும் புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை.
நோயாளிகளை கொண்டுசெல்வதற்கு பெரும் சிரமம் காணப்படுவதாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி கூறுகிறார்.
பலதரப்பட்ட கடிதங்களை அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் தொடர்ந்து பணி செய்வதற்கு சிரமமாக உள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
மருதங்கேணி – பருத்தித்துறை வீதியில் அண்ணளவாக ஒரு கிலோ மீட்டர் புனரமைப்பதற்கு 8 கோடியே 2இலட்சத்து 92 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
16 கி.மீ தூரம் கொண்ட வீதிக்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டு தரம் குறைந்த வீதியாக புனர்நிர்மாணம் செய்துள்ளனர்.
வீதி படுமோசமாக பாதிக்கப்பட்டு பயணிக்க முடியாத நிலையில் உள்ளது. வீதியை புனர்நிர்மாணம் செய்யாவிடில் இதற்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை மேற்கொள்ளவுள்ளோம்.
இந்த வழக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், பிரதேச சபையினர் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்படுமென தெரிவித்தார்.