
சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய கொடுமைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அல்-ஜெஸீரா நேர்காணலில் எதிர்கொண்ட சிங்கள பேரினவாத அரசின் முன்னாள் சனாதிபதி
அல்-ஜெஸீரா அலைவரிசையின் மெஹ்தி ஹசனினால் நடத்தப்படும் நேர்காணல் தொடரில் சிங்கள பேரினவாத அரசின் முன்னாள் சனாதிபதி அண்மையில் கலந்துகொண்டார். இதன் போது, சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு நடத்திய தமிழின அழிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளை அவர் எதிர்கொள்ள முடியாமல் திணறினார். தமிழர் அரசியலின் முக்கிய தருணங்களில் ஒன்றாக இது அமைந்திருந்தது. யுத்தம் நிறைவுற்றதில் இருந்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் நேச அணிகளால் பெறப்பட்ட அடைவுகளின் ஒரு பிரதிபலிப்பாக இது நோக்கப்படுகிறது.
ஒரு முக்கிய சர்வதேச செய்தி ஊடகத்தில் சிறிலங்காவின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவர் மீது ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்களுக்கு வகை கூறும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு சந்தர்ப்பமாக இது நோக்கப்படலாம். யுத்தம் நிறைவுற்றவுடன், சிங்கள அரசாங்கம் ஒரு ‹மனித நேய நடவடிக்கையை› முன்னெடுத்ததாகவும் அதன் போது பொது மக்களுக்கு எந்த வித சேதங்களும் ஏற்படவில்லை என அறிவித்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது. உலகம் முழுவதும் காணப்பட்ட பல அதிகாரம் மிக்க நபர்கள் அரசாங்கத்தின் இந்தக் கூற்றை நம்பும் நிலையில் காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக, 2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்காவில் தமது ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சில சிரேஷ்ட மேற்குலக கல்வியியலாளர்கள் இறுதி யுத்தத்தின் போது பொது மக்களுக்கு பாரிய கொடூரங்கள் இழைக்கப்பட்டன என்ற தமிழ் மக்களின் கூற்றுடன் முரண்பட்ட நிலையும் காணப்பட்டது. எனினும், தொடர்ந்து வந்த வருடங்களில், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று முக்கியமான அறிக்கைகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டதுடன் நடந்த முடிந்த யதார்த்தங்களும் குறித்த அறிக்கைகளில் நிறுவப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் தமிழ் மக்கள் முன்னெடுத்த முயற்சிகள் காரணமாக நடந்த கொடுமைகளை நிறுவும் இந்த அறிக்கைகள் எம் கைகளில் தவழ்கின்றன. இந்த அறிக்கைகளின் உருவாக்கம் தற்செயலாக நடந்தது அல்ல, சிங்கள அரசாங்கம் மாத்திரம் அன்றி சிறிலங்கா மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஓரங்கட்டப்படல் மற்றும் தடைகளைத் தாண்டி தமிழ் மக்கள் இந்த அறிக்கைகளுக்காக போராடியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் தமிழர் தரப்பு தலைவர்கள் என்று அழைக்கப்பட்ட பலர் சர்வதேச விசாரணைகளுக்கு எதிராக செயல்பட்டனர். இந்த அறிக்கைகள் காரணமாகவே, இக்குற்றச்சாட்டுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பானவர்களால் கூறப்படும் கூற்றுக்கள் அல்லது அவர்கள் கூறும் பொய்கள் என ரணில் விக்ரமசிங்கவால் புறந்தள்ள முடியாத நிலை தோன்றியது; அவை மதிப்பு மிக்க சர்வதேச அமைப்புகளால் நிறுவப்பட்ட கசப்பான யதார்த்தங்களாக ஆகியுள்ளன. இன அழிப்பு தொடர்பான உறுதிப்படுத்தல்கள் தற்போது அல்-ஜெஸீரா போன்ற தளங்களில் கூட சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாத யதார்த்தங்களாக மாற்றமடைந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு நிலைகுலைந்த ஈழத்தமிழர்களின் நிலையுடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். அல்-ஜெஸீரா ஒரு முக்கிய ஊடகமாக வளர்ந்து நிற்கின்றது. உலகம் முழுவதும் பார்க்கப்படும் ஒரு ஊடகமாக அது உள்ளது, அத்துடன் உலகின் மிகவும் முக்கிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாக அது மாற்றமடைந்துள்ளது. மேற்குலக ஊடகங்களால் புறக்கணிக்கப்படும் முக்கிய உலக விவகாரங்களில் அது கவனம் செலுத்தி வருகின்றது. அதன் யூடியூப் அலைவரிசை மாத்திரம் 15.4 மில்லியன் பயனர்களால் சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது.
நேர்காணலின் போது, மிகப் பிரபல்யமான மற்றும் நன்கு மதிக்கப்படும் சர்வதேச ஊடகவியலாளர்களில் ஒருவரான மஹ்தி ஹசன் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளில் காணப்பட்ட சான்றுகளை ரணில் விக்ரமசிங்கவிடம் தொடர்ச்சியாக முன் வைத்ததுடன் அவர் அதிகாரத்தில் இருந்த போது இவற்றுக்கு ராஜபக்சேக்களை பொறுப்புக்கூற வைக்க தவறியமை தொடர்பில் தொடர்ச்சியான கேள்விக்கணைகளை தொடுத்தார். ரணில் பொய்களை அடுக்கிய போது, ஒரு கட்டத்தில் அவர் எந்தவொரு வைத்தியசாலை மீதும் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவில்லை எனவும் கூறினார். வைத்தியசாலைகள் மீது குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான சான்றுகளை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளில் இருந்து முன்வைத்து மஹ்தி ஹசன் ரணிலின் பொய்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
நேர்காணலின் போது பிரசன்னமாகியிருந்த மூவரைக் கொண்ட நிபுணர் அணியில் அங்கம் வகித்திருந்த கலாநிதி மதுரா ராசரட்ணத்திடம் இருந்து மஹ்தி ஹசன் இத்தருணத்தில் கருத்துக்களைப் பெற்றார். கலாநிதி ராசரட்ணம் லண்டன் பல்கலைக்கழத்தில் ஒப்பீட்டு அரசியல் துறையில் ஒரு இணைப் பேராசிரியாராக பணியாற்றுவதுடன் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபடும் ஒரு ஆய்வு மற்றும் பரப்புரை நிறுவனமான PEARL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமாவார்.
காஸா மற்றும் முள்ளிவாய்க்கால் இடையான ஒப்பீடுகள் மற்றும் தொடர்புகளையும் அவர் இதன் போது தெளிவு படுத்தினார். அதிக அளவில் பகிரப்பட்ட இந்த நேர்காணலின் காணொளித் துணுக்கில், இரண்டு சமூகங்களும் கடலினால் முடக்கப்பட்டு, தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்களால் சின்னாபின்னமாக்கப்பட்டு, உணவு மற்றும் மருந்து வழங்கல்கள் தடுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதையும் அதிகளவான சேதங்கள் மற்றும் காயங்களால் அவதியுற்றதை அவர் சுட்டிக்காட்டினார். அண்மையில் PEARL அமைப்பின் மனித உரிமைகள் சட்ட வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத் தெளிவுபடுத்தல் ஆவணத்தை எடுத்துக்காட்டிய அவர் இந்நிகழ்வுகள் சர்வதேச சட்ட நியமங்களின் அடிப்படையில் இன அழிப்பாக கருதப்பட முடியும் என்பதையும் எடுத்துரைத்தார். நேர்காணல் நிகழ்வில் பின்வரும் கருத்துக்களை கலாநிதி ராசரட்ணம் வெளியிட்டார்:
«சிங்கள பேரினவாத அரசின் முன்னாள் சனாதிபதி விக்ரமசிங்க ஒரு அமைப்பின் ஒரு முக்கிய நபராகும், தன்னை உருவாக்கிய ஒரு முறைமையை சீர்திருத்த அவர் எடுத்த முயற்சி இந்த நேர்காணைலை அவர் எடுத்துக்கொள்ளும் விதத்தைப் போன்றே அமைந்திருந்தது. அவர் அங்கம் வகித்த அந்த முறைமை கொடூரமான குற்றங்களை இழைத்துள்ளது; நாம் தற்போது ஒரு அறிக்கையை தயார் செய்துள்ளோம், அது இக்குற்றங்களை இன அழிப்பு என்று குறிப்பிடுகிறது, மேலும் முறைசார் வகையில் முன்னெடுக்கப்பட்ட அந்தக் குற்றங்கள் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளன. அவர் ஆட்சிக்கு வந்தார், அந்நேரம் இடம்பெற்ற போராட்டங்களில் கிடைத்த உந்து சக்தியைப் பயன்படுத்தி முறைமையை மாற்றியமைக்கும் ஒரு அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது. ஆனால், அவர் மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்றினார்.»
«நீதி வழங்குவதற்கான நேரம் கடந்து நீண்ட காலமாகிவிட்டது. இந்தக் கொடூரம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி பற்றிய உங்களின் கேள்வியை திரு விக்ரமசிங்க அணுகிய விதம், பாரிய அளவில் சிங்கள அரசாங்கத்தின் மனப்பாங்கையும் அந்த பாரிய அளவில் எவ்வாறான அட்டூழியங்களுக்கு உள்ளாகியுள்ளோம் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. நிச்சயமாக, இத்தருணத்தில் காஸா எமது மனங்களை நெருடும் விடயமாக அமைந்துள்ளது, எனினும் முள்ளிவாய்க்கால் கடற்கரைகளில் இடம் பெற்ற விடயங்களுக்கும் காஸாவில் இடம்பெற்ற விடயங்களுக்கும் இடையில் பாரிய ஒற்றுமைகளை எம்மால் அவதானிக்க முடிகின்றது. இரண்டு நிகழ்வுகளிலும், பாரிய சனத்தொகைகள் கடலினால் முடக்கப்பட்டுக் காணப்பட்டன, மனித நேயம் இல்லாத சூழ்நிலைகளை, கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதல்களை அவை எதிர்கொண்டன. பாரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டன, மயக்க மருந்துகள் இல்லாத நிலையில் [அரசாங்கத்தால் தடுக்கப்பட்டது ] மருத்துவ சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் கொடூரமும் அரங்கேறியது. ஐந்து மாத காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட 40,000 மக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இறுதி யுத்தத் தினங்களில் நாளொன்றுக்கு ஆயிரம் மக்கள் இறந்துகொண்டிருந்தனர். பல்லாயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. திரு விக்ரமசிங்க அங்கம் வகிக்கும் 70 வருட வரலாறு கொண்ட ஒரு அரசியல் முறைமை காரணமாகவே இக்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. பெரும்பான்மையை திருப்திப்படுத்துவதற்காக அந்த அரசியல் முறைமை நல்லாட்சி, நியாயம், நீதி, வினைத்திறன் என்பவற்றைப் பலி கொடுத்து இனவாத அரசியலை முன்னுரிமைப்படுத்தியது.அவ்வாறான ஒன்றை நீங்கள் செய்யும் போது என்ன நடக்கும்? ஏனைய குழுக்களுக்கு எதிரான வெறுப்புணர்வை நீங்கள் கட்டவிழ்த்து விட்டீர்கள், மேலும் மோசமான உங்கள் ஆட்சி பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.
இந்த தரப்பின் ஒரு அங்கமாக கலாநிதி ராசரட்ணமும் செயற்பட்டு வருகிறார். ‹Tamils and the nation› (தமிழர்களும் நாடும்) என்ற அவரது புத்தகம் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் நிலவும் துன்புறுத்தல் மற்றும் பாரபட்சம் என்பன இந்தியாவில் உள்ள தமிழர்களின் நிலைகளை விட எவ்வாறு மற்றும் ஏன் வேறுபட்டுக் காணப்படுகின்றது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
முள்ளிவாய்க்கால் தொடர்பில் மிகவும் பிரபலமான No fire zone› (யுத்த சூனியப் பிரதேசம்) என்ற ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பாளரான ஹெலம் மார்க்ரேயும் நேர்காணலை அவதானித்த வாசகர்களில் ஒருவராகக் காணப்பட்டார். ஒரு கேள்வியைக் கேட்க அவர் அழைக்கப்பட்டபோது, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்ரேல் ஆதரவு கொள்கை வகுப்பாளர்கள் ஹமாஸைத் தோற்கடிக்க இலங்கையை முன்னுதாராணமாகக் கொண்டு முதலில் யுத்த சூனியப் பிரதேசங்களை அறிவித்து அங்கு சனத்தொகையை வரவழைத்து அதன் பின்னர் அவ்விடங்களில் சரமாரியான குண்டு வீச்சுகளை நடத்துமாறு இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டதை வெளிக்கொணர்ந்த ஒரு அறிக்கையை கோடிட்டுக் காட்டினார். அந்த அளவில் பாரிய கொடுமைகளை இழைக்க விரும்பும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இலங்கை அமைந்துள்ளது பற்றி நீங்கள் கவலையடைகிறீர்களா என்ற கேள்வியை அவர் ரணிலிடம் முன்வைத்தார். பொது வெளியில் சிறிலங்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே இவ்வாறான ஒரு ஒற்றுமை காணப்படுவது வெளிக்கொணரப்பட்டது ரணில் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் ஒரு தருணமாக ஆகியது.
விக்ரமசிங்கவின் பதில்கள் குழந்தைத்தனமானவையாகவும், பிழையானவையாகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அளிக்கப்பட்டனவாகவும் காணப்பட்டன. நேர்காணலில் இருந்து தான் வெளியேறப் போவதாக அவர் பல தடவைகள் அச்சுறுத்தினார், ‹கருத்து தெரிவிக்க விரும்பவில்லை› (No Contest) எனக் கூறினார், ஏனைய தருணங்களில் முழுமையாக மௌனம் காத்தார். விடயங்களை மறந்த, ஒரு கோமாளி போல் அவர் தோற்றமளித்தார். குற்றச்சாட்டுகளை நிராகரிப்பது, தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது புலம்பெயர் அமைப்புகளைக் குறைகூறுவது நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்பதை அவர் அறிந்துகொண்டார், எனவே அமைதியாக அமர்ந்திருப்பதைத் தவிர சிறந்த தெரிவுகள் எவையும் அவருக்கு இருக்கவில்லை. எனினும், உள்ளூர் மக்களிடம் பேசும் போது, கலாநிதி ராசரட்ணம் அண்டன் பாலசிங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சிறிலங்கா ஒரு ஆரோக்கியமான சனநாயகம் மற்றும் தமிழர் பிரச்சினையை அது கடந்து சென்றுவிட்டது என ரணில் விக்ரமசிங்கவும் அவரின் ஏனைய கொழும்பு மேட்டுக்குடி அரசியல்வாதிகளும் தொடர்ந்து பாசாங்கு செய்வதை கடந்த பதினைந்து வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழர் போராட்டம் தற்போது சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது. மாறாக, தற்போது இலங்கை ஒவ்வொரு தடவை சர்வதேச அரங்கில் ஒவ்வொரு தடவை தோன்றும் போதும் அது இனவழிப்பு மற்றும் தற்போதைய பிரிவினை ஆக்கிரமிப்பு என்பவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. சிறிலங்கா சர்வதேச அரசியலின் மையமாக தமிழர் விடுதலைப் பிரச்சினை அமைந்துள்ளதை அல்-ஜெஸீரா நேர்காணல் உலகுக்கு எடுத்தியம்பியுள்ளது.