
உலக உள்ளக கிரிக்கெட் சம்மேளனம் (WICF) 2025ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரினை நடாத்தும் உரிமத்தினை இலங்கை உள்ளக கிரிக்கெட் சபை (CICA) இற்கு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் 12ஆவது முறையாக நடைபெறவிருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரானது இலங்கையில் ஒழுங்கு செய்யப்படவிருக்கின்றது.
உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரானது இம்முறை கீழ் வருகின்ற நான்கு பிரிவுகளில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
- ஆடவர் திறந்த பிரிவு (Men’s Open)
- மகளிர் திறந்த பிரிவு (Women’s Open)
- 22 வயதின் கீழ்ப்பட்ட ஆடவர் (U22 Men’s)
- 22 வயதின் கீழ்ப்பட்ட மகளிர் (U22 Women’s)
இந்த உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை உட்பட இம்முறை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்குபெறவிருக்கின்றன.
சுமார் 1000 இற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கெடுக்கவிருக்கின்ற இந்த உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரானது, அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த மாஸ்டர்ஸ் உலகக் கிண்ணத் தொடரின் இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்ட மற்றுமொரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது.
உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் அனைத்தும் தலவத்துகொட அவுஸ்டேஷியா உள்ளக அரங்கில் செப்டம்பர் 27ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 05ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக கடந்த 1995ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்கமில் முதன் முறையாக உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரானது ஒழுங்கு செய்யப்பட்டதோடு சுமார் 21 வருட இடைவெளியின் பின்னர் இம்முறை இரண்டாவது தடவையாக இலங்கை உள்ளக கிரிக்கெட் தொடருக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.