
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு சற்று நேரத்திற்கு முன்னதாக நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அதற்கமைய, தமிழகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற இந்தியப் பிரதமர் தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடருந்து பாலத்தை இன்று (06) திறந்து வைக்கவுள்ளார்.
பாம்பன் தொடருந்து பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில் தனது இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய பிரதமர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்»எனது வருகையின் போது அளித்த அன்பிற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayakec), மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொழும்பாக இருந்தாலும் சரி, அநுராதபுரமாக இருந்தாலும் சரி, இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார, ஆன்மீக மற்றும் நாகரிக உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை அளிக்கும்.» என இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.