
முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, Bern மாநிலத்தில் உள்ள Europaplatz என்னும் இடத்தில் மாலை 15.00 மணியளவில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.
இந்த நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாக, பேர்ன் மாநிலத்திற்குள் கவனயீர்ப்பு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் வீதியோரங்களில் இனவழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களை பல்லின மக்களுக்கு வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, வணக்க நிகழ்வு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ஆரம்பமானது. நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஜெர்மன் மொழிகளில் தொகுத்து வழங்கப்பட்டது.
நிகழ்வின் தொடக்கமாக பொதுச் சுடர் ஏற்றல், தேசியக் கொடியேற்றல் மற்றும் அகவணக்கம் இடம்பெற்றன. மலர்வணக்கத்தின் நேரத்தில் எழுச்சிக்குயில் வெற்றி பெற்ற செல்வி சிறிலா சிவதாஸ் அவர்களால் முள்ளிவாய்க்கால் பாடல் பாடப்பட்டது. நடைபயணத்தில் பங்கேற்றவர்கள், அவர்களின் இலட்சியப் பயணத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.
தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் உரைகள் நிகழ்த்தினர். தொடர்ந்து பேர்ன் சிவன் கோவிலின் குருக்கள், தமிழில் இனவழிப்பு சார்ந்த உரையாற்றினார். இதன் பின்னர், எமது இனவழிப்பின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசியல் துறை பொறுப்பாளர், முள்ளிவாய்க்கால் இனவழிப்பும், சமகால அரசியல் சூழல்களும் குறித்து மக்களுக்குத் தெளிவான விளக்கங்களை வழங்கினார். சுவிஸ் நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் நிலைப்பாடுகள் பற்றியும் பேசினார்.
சிறப்புரையாக குர்திஷ் இனத்தவரது உரையும் இடம்பெற்றது. அவர்கள் தமிழீழத்தை ஆதரிப்பதாகவும், எப்போதும் எம்முடன் இருப்பதாகவும் ஜெர்மன் மற்றும் தங்களது சொந்த மொழியில் உரையாற்றினார்கள். இதன்பின்னர், எமது வலிகளை பிரதிபலிக்கும் எழுச்சி நடனமும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து நம்புகங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க, பங்கேற்பாளர்கள் கைதட்டியபடி அந்த உணர்வில் மூழ்கினர். இறுதியில், தேசிய செயற்பாட்டாளர்கள் அணிவகுத்து, தேசியக் கொடிகளை கையேற்றி நிகழ்வை நிறைவு செய்தனர்.
-சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

















































