
ஆனையிறவில் உற்பத்தியாகும் உப்பு இனிமேல் ‘ஆனையிறவு உப்பு’ என்றே அழைக்கப்படுமென கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் பெயர் ”ரஜ லுணு” (அரச உப்பு) என்று குறிப்பிடப்படுகிறது.
முழு சந்தை தொகுதியையும் கைப்பற்றுவதற்காகவே இந்த பெயர் பயன்படுத்தப்பட்டது.
அந்த வகையிலேயே ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கும் ”ரஜ லுணு”என பெயரிடப்பட்டது.
எனினும் வடக்கு,கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் வலியுறுத்தலுக்கமைய ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ ஆனையிறவு உப்பு’ என பெயர் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மற்றுமொரு தரப்பினரை தவறாக வழிநடத்தியுள்ளனர் . உப்பளத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக தொழிலாளர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதே வேளை,ஆனையிறவு உப்புத் தொழிற்சாலைக்கு அரசியல் பரிந்துரைகளுடன் நியமனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முறையான நடைமுறைகளுக்கு அமைவாகவே நியமனங்கள் வழங்கப்படுகின்றன.
ஆகவே அரசியல் தலையீடு உள்ளது என்று குறிப்பிடுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனையிறவு உப்புத் தொழிற்சாலையின் சில ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொழிலாளர்களின் நலன்புரி திட்டங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் என மேலும் தெரிவித்தார்.