
இன்று (06.12.2024)107வது சுதந்திர நாளைக் கொண்டாடும் பின்லாந்து தேசத்திற்கு தமிழீழத் தமிழர்களின் சுதந்திர நாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
உலக வரைபடத்தில் பின்லாந்து தேசம் தனது எல்லைகளை வரையறுத்து, பாதுகாப்பான ஒரு நாட்டைக்கட்டியெழுப்புவதற்கு கொடுத்த உயிர் விலை மிகவும் அதிகம். அளவிடமுடியாத பெறுமதியானது.
நீண்ட நெடிய போர்களிற்கு பின்னர் இலட்சக்கணக்கான உயிர் அர்ப்பணிப்புகளின் பின்னரே தேசவிடுதலை சாத்தியமாகியது. 1917 டிசம்பர் 06ம் திகதி பின்லாந்து தனது சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியது. இன்று இந்த சுதந்திர தேசத்திற்கு வயது 107 ஆகும். இன்றைய இந்த சுதந்திர நாளை பின்லாந்து தேசம், ரஸ்யாவுடன் போர் மூளுமா என்ற நெருக்கடிநிலையிலேயே துணிச்சலுடன் கொண்டாடுகிறது.
பின்லாந்து, நேட்டோவுடன் இணைந்ததிலிருந்து எல்லை நாடான ரஸ்யாவிற்கும் பின்லாந்திற்கும் இடையே ராஜதந்திர, இராணுவ முறுகல்நிலை உருவாகி அது நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.இந்த சுதந்திர பின்லாந்து தேசம் தனது இறைமையைக் காத்துக்கொள்ள சுதந்திரநாளில் உறுதியெடுத்துக்கொள்கிறது.தமிழீழத் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து பின்லாந்திற்கு வந்தடைந்த தமிழர்கள் நாங்கள் எமது இன்னொரு தாய்மடியான சுதந்திர பின்லாந்தை உள்ளம் நிறைய வாழ்த்துகிறோம்.