
யாழ்.குடாநாடு படைகளால் கைப்பற்றப்பட்ட 1996ம் ஆண்டு காலப்பகுதியில் இடப்பெயர்வின் பின்னர் ஊர் திரும்பிய போது காணாமல் ஆக்கப்பட்டவர்களது உடலங்களே தற்போது செம்மணயில் மீட்க்கப்படுவதாக நம்பப்படுகின்றது.
அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 650பேர் வரையிலான தகவல்கள் தற்போது வரை இல்லாதேயுள்ளது.அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற போதும் உடல எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் செம்மணி – சித்துபாத்தி மயானத்தில் இடம்பெற்றுவரும் அகழ்வுகளின் போது நேற்றையதினம் 5 மனித மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் இன்றைய தினம் ஒரு மண்டையோட்டுத் தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு இரண்டாவது மண்டையோட்டுத் தொகுதி அகழ்ந்து எடுப்பதற்கான நடவடிக்கை மேள்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுவரை செம்மணி – சித்துபாத்தி மயானத்தில் 7 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும் மீட்கப்பட்ட மண்டை ஓடுகள் உடைக்கப்பட்டுள்ளதால் கொலையானவர்கள் சித்திரவதையின் பின்னர் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
அதிலும் சிறார்களது மனித எச்சங்களும் மீட்கப்படுகின்ற நிலையில் சித்திரவதையின் பின்னராக குடும்பங்களாக கொலைகள் அரங்கேறியிருக்கலாமென்ற சந்தேகமும் எழுந்துள்ளது.