
வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் 10 சபைகளில் தம்மால் ஆட்சியமைக்க முடியும் எனவும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அநேகமாக 4 சபைகளில் ஆட்சியமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் சபைகளில் அவர்கள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆகவே இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சி சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.