
செம்மணி மனிதப் புதைக்குழியில் 600 பொதுமக்கள் கொன்று புதைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
செல்வி கிரிஷாந்தி படுகொலையுடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு முன்னர் நீங்கள் எதாவது கூறப்போகின்றீர்களா என வினவியதற்கு, சோமரத்ன ராஜபக்ச எனும் இராணுவ அதிகாரி வழங்கிய பதில் செம்மணி படுகொலையை வெளி கொணர்ந்திருந்தது .
சுமார் 400 தொடக்கம் 600 வரையான இளைஞர், யுவதிகள் கொலை செய்யப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அதே போல ஜெயவர்தனா, துடுகல்ல, உதயமார, லலித் ஹோவகே, அப்துல் நஷார் ஹமீத், சமரசிங்க உட்பட்ட 20 இராணுவ அதிகாரிகளையும் சூத்திரதாரிகளாக அவர் அடையாளம் காட்டியிருந்தார்
யாழ்ப்பாணம் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிய திரு செல்வரத்தினம், அரியாலையைச் சேர்ந்த பார்த்தீபன், சுதாகரன் என்ற இரு இளைஞர்கள், இளம் தம்பதிகள் என பாதிக்கப்பட்ட பலருக்கு நடந்த கொடூரத்தை விபரித்தார்
செம்மணி மற்றும் பகுதிகளில் உள்ள 10 மனிதப் புதைகுழி இடங்களை நான் அடையாளம் காட்டுவேன் என்றார்
மற்றுமொரு குற்றவாளியான ஏ.எம். பெரேரா ஐந்து இடங்களைக் காட்ட இருக்கின்றார் என சொன்னார்
ஒரே புதைகுழியில் மட்டும் 25 முதல் 30 வரையான சடலங்கள் ஒன்றாகப் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன என பல தகவல்களை சொன்னார்
கிரிஷாந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் வழங்கிய வாக்குமூலத்தினையடுத்து, செம்மணி புதைகுழியினை அகழ்வதற்கு நீதிபதி திரு மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ் நீதவான் நீதிமன்ற விசேட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
செம்மணி புதைகுழி 1999 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2000 ஆம் ஆண்டு பங்குனி 27 ஆம் திகதி வரையான ஒன்பது மாதங்கள் நடைபெற்றன.