
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும் திருவிழா நடைபெறும் என யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவுக்கு பின்னரான நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே குரு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை இலங்கையில் இருந்து 4ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இம்முறை இந்தியாவில் இருந்தும் 4ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் , இலங்கையில் இருந்தும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சென்றனர். அதனால் சுமார் 13 ஆயிரம் பக்தர்கள் கச்சத்தீவில் கூடியமையால் பெரும் இன்னல்களை பக்தர்கள் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
