தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு , காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் , கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது
குறித்த கலந்துரையாடலின் பின்னர்,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள காணிகளை அளவீடு செய்யாமல் , காணிகளை விடுவியுங்கள் என கேட்டோம். அதற்கு அவர்கள் காணிகளை அளவீடு செய்து உறுதியில் உள்ள காணிகளின் அளவின் அடிப்படையிலையே காணிகளை உரியவர்களிடம் கையளிப்போம் என கூறினார்கள்.
தற்போது 17 பேர் மாத்திரமே காணி உறுதிகளை கொடுத்து எமது காணிகளை மீட்க தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் விகாரை அமைந்துள்ள பகுதியில் எமது 17 பேரின் காணிகளை தவிர மேலும் சிலரின் காணிகளும் உண்டு.
எனவே விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் தமது காணிகள் காணப்படுமாயின் அவர்கள் தமது உறுதிகளுடன் வந்து காணிகளை அடையாளம் காட்டி , உங்கள் காணிகளை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
தற்போது காணி உறுதி பத்திரங்களை கையளித்து , காணி உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட 17 பேருக்கே காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது,
இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால் , மீண்டும் நீங்கள் உங்கள் காணிகளை பெற 10 வருடங்களுக்கு மேலாக போராட வேண்டிய நிலைமை ஏற்படும்
எனவே தையிட்டி விகாரை பகுதிக்குள் காணி உள்ளவர்கள் தமது காணிகளை உறுதிப்படுத்த கூடிய ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்