
மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைப்பதற்காக விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று (20) அமைக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆய்வு செய்து பரிந்துரைகள் முன்வைப்பதற்காக விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று (20) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவை அமைப்பதற்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 06ஆம் திகதி நடைபெற்றிருந்தது. எனினும், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னரே குழு உறுப்பினர்களின் பெயர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய நிலையில், உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட தாமதம் கவலைக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சில தினங்களுக்கு முன்பு மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமையை ஆய்வு செய்ய மற்றொரு குழுவை நியமிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் அதை முறியடித்ததன் பின்னரே இக்குழு நியமிக்கப்பட்டதாகவும் கூறினார்.
காலம் தாழ்த்தியாவது குழு நியமிக்கப்பட்டுள்ளமையினை வரவேற்கின்றோம். ஜனவரி மாதத்திலேயே குழு முறையாக நியமிக்கப்பட்டிருந்தால், இதுவரை அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இக்குழுவில் தனது பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இக்குழுவில் மொத்தம் 12 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். எனினும், தற்போது தலைவர் உட்பட 11 உறுப்பினர்களே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடந்த காலங்களில் மாகாண சபைகள் தொடர்பான அமைச்சராக பணியாற்றிய பைசர் முஸ்தாபாவை பன்னிரெண்டாவது உறுப்பினராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
