மாவீரர் நாளினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் டென்மார்க் மக்களின் நிதிப்பங்களிப்புடன் மன்னார் நகரில் 160 இற்கும் மேற்பட்ட மாவீரர் பெற்றோர்கள் பங்கேற்புடன் கூட்டுறவு மண்டபத்தில் 20.11.2025 இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.
முதல் நிகழ்வாக மாவீரர் வெற்றிச்செல்வனின் தாயார் அவர்கள் பொதுச்சுடறேற்ற, பொதுபடத்திற்கான மலர் வணக்கத்தினை மன்னாரில் முதல் மாவீரர் அன்சார் அவர்களின் சகோதரி ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து அருட்தந்தையர்கள், பெற்றோர்கள், முன்னாள் போராளிகள் ஈகைசுடறேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த உரைகள் நிகழ்த்தப்பட்டது. அருட்தந்தை அருள்ராஜ் அடிகளாரும் அருட்தந்தை லக்கோன்ஸ் அடிகளாரும் மற்றும் அருட்தந்தை லக்சன் அடிகளாரும் உணர்வுமிக்க சிறப்பான உரைகளை வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து முன்னாள் போராளி தென்றல்மாறனின் உரையுடன் தேனீர், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக நல்லின தொம்தேசி மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், கல்வியியலாளர்கள், துயிலுமில்ல செயற்குழுவினர், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்








