இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற தேர்தல் (Sri Lanka parliamentary election)நாடளாவிய ரீதியில் இன்று (14) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் குடத்தனை அ.மி.த.க. பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் துன்னாலை காசிநாதர் அ.த.க.பாடசாலையில் தனது ஜனநாயக கடமையினை நிறைவேற்றினார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியின் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் வாக்களித்தார்.
அத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) உறுப்பினர் எஸ்.வேந்தன் உடுப்பிட்டி தேர்தல் உடுப்பிட்டி பல.நோ.கூ.சங்க மண்டபத்திலும் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஊஞ்சல் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஈ.எஸ்.பி.என்.கமலரூபன் நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் தனது வாக்கை செலுத்தினார்.
மாம்பழ சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்ஜேம்ஸ் மகளிர் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொக்குவில் மேற்கு சி.சி.த.க.பாடசாலையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இன்று காலை வாக்களித்தார்.
ஈ.பி.டி.பிசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது பிறந்த ஊரான யாழ் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
அத்துடன் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், தனது வாக்களிப்பை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை பதிவு செய்தார்.
