
கனகபுரம் மாவீரர் துயலும் இல்லத்தில் (27) நடந்த மாவீரர் நாளில் தன்னை சுடரேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அழைத்த நிலையில், இறுதியில் தான் சுடரேற்றாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக பூநகரியை சேர்ந்த மூன்று மாவீரர்களின் அன்னையொருவர் வெளியிட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த போது மாவீரர்களின் அன்னையை ஒரு போதும் இவ்வாறு நடத்தியது கிடையாது என்ற அறச்சீற்றத்துடன் மூன்று மாவீரர்களின் தாயொருவர் மாவீரர்நாளுக்கு மறுநாள் வெளியிட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் தன்னை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மாவீராகி விட்ட தனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தன்னை பொதுச் சுடரேற்ற அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு தானும் சம்மதம் தெரிவித்தாகவும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில் குறித்த அன்னை (27) மாலை 5 மணிக்கு கனகபுரம் துயிலுமில்லத்திற்கு சென்றபோது அங்கு நின்றவர்கள் தங்களை ஏற்பாட்டுக்குழு எனத்தெரிவித்து விளக்கேற்றுவதற்கு தாங்கள் வேறொருவரை ஏற்பாடு செய்துவிட்டதாக தெரிவித்து தன்னை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.
இந்தச்சம்பவம் தனக்கு மிகுந்த மன வேதனையை தருவதாகவும் முழங்கால் வரை வெள்ளத்தால் நிரம்பியுள்ள தனது வீட்டில் இருந்து ஒரு மைல்தூரத்துக்கு வெள்ளத்தால் கடந்து இன்னல்களுடன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்றபோதும் தான் இறுதியில் அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒருபோதும் மாவீரரின் தாயை இவ்வாறு நடத்தியது கிடையாதெனவும் கண்ணீருடன் தெரிவித்தார்.