
யாழில் (Jaffna) வைத்தியசாலை மற்றும் மருத்துவ கழிவுகளை வீதியோரங்களில் கொட்டும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கும் வீதி ஒன்றில் மருந்து போத்தல்கள் பொறுப்பற்றவர்களால் வீதியில் கொட்டப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
இந்த சமூக பொறுப்பற்ற சம்பவம் யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நவாலியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வீதியில், மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படும் பல போத்தல்கள், உடைந்த நிலையில் வீதியில் கொட்டப்பட்டதால் வீதியால் பயணிப்போர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இதனையடுத்து வீதியால் பயணித்தவர்கள் வீதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை அகற்றியதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்