
பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள ‹ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத்தொகுப்பு வெளியீடு› பற்றிய சுலோச்சனா அருண் எழுதிய நிகழ்வுக் குறிப்பிது.
ஆறாம் நிலத்திணைப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு! – சுலோச்சனா அருண் –
கனடாவில் இயங்கும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினர் முற்றிலும் கனடிய தமிழ் பெண்களே எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘ஆறாம் நிலத்திணை சிறுகதைத் தொகுப்பு’ என்ற பெயரில் சென்ற 6 ஆம் திகதி, ஏப்ரல் மாதம் 2025 அன்று எற்ரோபிக்கோ நகரில் உள்ள Thistletown Community Centre மண்டபத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிட்டுப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் பேராசிரியர் இ.பாலசுந்தரம், முனைவர் பார்வதி கந்தசாமி, முனைவர் வாசுகி நகுலராசா, காப்பாளர் நவா கருணரட்ணராசா, உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், ஒன்ராரியோ மாகாண அரசின் மாகாணமன்ற உறுப்பினரும் இணையமைச்சருமான வியேஜ் தணிகாசலம் மற்றும் ஒன்ராரியோ அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என்று பல தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டின் போது, முதலில் முனைவர் பார்வதி கந்தசாமியின் வாழ்த்துரையும் கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் நிறுவுனர் கமலவதனா சுந்தாவின் நூல்அறிமுக உரையும் இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து தொகுப்பாசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் வெளியீட்டுரை இடம் பெற்றது. முனைவர் வாசுகி நகுலராசாவின் ஆய்வுரையைத் தொடர்ந்து கமலவதனா சுந்தா அவர்கள் சிறுகதைத் தொகுப்பு நூலை வெளியிட்டு வைத்தார்.
தொகுப்பாசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில், நேரடியாகவும் மெய்நிகர் வழியாகவும் நடந்த தனது சிறுகதை பயிலரங்கில் பங்கு பற்றிய அனேகமான ஆரம்ப எழுத்தாளர்களின் கதைகளும் இதில் இடம் பெற்றிருப்பதாகவும் இளைய தலைமுறையினர் இப்பயிலரங்கில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் 26 கனடிய தமிழ்ப் பெண்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்ப்பெண்கள் ஏற்படுத்திய ஒரு சாதனையாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.