
மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா புளியங்குளத்தில் நேற்று (27) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் போருக்கு பின்னர் கடும் வேகத்தில் குடியேற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுகட்சி ஆட்சியமைப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடுகளை எடுத்திருந்தோம்.
இன்று நிலைமை மாறியிருக்கிறது. நாட்டிலே ஆட்சி செய்யும் ஒரு அமைப்பு இந்த பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு போட்டியிடுகின்றது. எனவே மத்தியிலே ஆளும் தரப்பிற்கு இந்த பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள்.
பாராளுமன்றில் எங்களுக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு கட்சி இன்று தேர்தல் மூலம் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல், துஷ்பிரோயகம் என்று மாறிமாறி ஆட்சி செய்த தரப்பின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. எனவே அவர் 42 சதவீதம் வாக்குகளை எடுத்திருந்தாலும், மாற்றம் வருகின்றது என்ற எதிர்பார்ப்பிலே அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை மக்கள் கொடுத்தனர்.
அந்தவகையில் சாணக்கியனின் தனி முயற்சியினால் கிழக்கு தப்பிவிட்டது. துரதிஷ்டவசமாக வடக்கிலும் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் எப்படியான முடிவு பாராளுமன்ற தேர்தலில் வந்திருந்தாலும் அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சியே. ஒரு குடியும் மூழ்கி போகவில்லை. குறைந்திருக்கிறது தான். ஆனாலும் நாங்கள் தான் இன்றும் பிரதான தமிழ்க் கட்சி. அதில் மாற்றம் இல்லை.
தேர்தல் முறைமையினால் ஏற்ப்பட்ட பிரதிபலனை வைத்து தமிழ் மக்களின் ஆணையும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசிய பிரச்சனையை தாங்கள் பார்த்து கொள்வோம் என்று கூறும் அவர்கள் அதிகாரப் பகிர்வில் நம்பிக்கை இல்லாதவர்கள். வட- கிழக்கு இணைப்பையும் பிரித்தவர்கள். அவர்கள் தமிழர்களின் ஆணை எங்களிடம் தான் இருக்கிறது என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு எதுவுமில்லை. அதைவிட மோசமான ஆபத்து எதுவும் கிடையாது. அந்த ஆபத்தை உடனடியாக நீக்க வேண்டும்.