
ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் மன்னார் பகுதியில்; கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய புதைகுழியின் மீட்கப்பட்ட உடலங்கள் அல்லாத சான்றுப்பொருட்களை ஆய்வு செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் சதொச மனித புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த மனித எச்சங்கள் மற்றும் பிற பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை, கடந்த வார இறுதி வரை, ஐந்து நாட்களாக, மன்னார் நீதவான் முன்னிலையில் இடம்பெற்றதாக மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி சாந்திப்பிரகாசம் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரும், சட்ட வைத்திய அதிகாரி குழுவும், மன்னார் நீதவான் முன்னிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினரும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளும் நீதிமன்ற அலுவலகர்களும் இணைந்து தரம் பிரித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது மனித எலும்புகள் தனியாகவும், அதனுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது.”
உடலங்கள் அல்லாத சான்றுப் பொருட்களை கொழும்பில் உள்ள தமது நிறுவனங்களுக்கு எடுத்துச் சென்று அகழ்வாராய்ச்சி செய்து அவை எந்த காலப்பகுதிக்கு உரியது என தொல்பொருள் திணைக்களமும், அந்த எலும்புக் கூட்டுத் தொகுதிகளில் இறப்புக்கான காரணம், வயது, பாலினம் போன்ற விடயங்கள் தொடர்பான மானுடவியல் அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.”