யாழ்.நெடுந்தீவு அருகே நேற்று மாலை எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஏழு இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.மயிலாடுதுறை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் குற்றச்சாட்டின் கீழ் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
