
இலங்கையில் பயங்கரவாதம் பௌதீக ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் மிகவும் உயிர்ப்புடன் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிடுகையில்,
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்களில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு அழைப்பானது ஒரு நபருக்கு மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய பெறுமதிமிக்க வாய்ப்பு எனவும், திறந்த உரையாடல் எனும் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனை விவாதிப்பதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமைந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், விடுதலைப்புலிகளின் ஆதரவு புலம்பெயர் அமைப்புகளின் பல்வேறு தலையீடுகளின் காரணமாக, இறுதியில் அந்த உரையாடல் வாய்ப்பை ரத்து செய்ய பல்கலைக்கழக மாணவர் சங்க அதிகாரிகள் தீர்மானித்ததாக தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷவிற்கு கிடைத்த இந்த அழைப்பு மற்றும் அது ரத்து செய்யப்பட்டது வரையிலான ஒட்டுமொத்த செயல்முறையை ஆய்வு செய்யும் போது மூன்று முக்கிய அரசியல் உண்மைகள் தெளிவாகின்றன
முதலாவதாக, நாமல் ராஜபக்ஷ கட்டியெழுப்பியுள்ள அரசியல் அடையாளம் மற்றும் அவரது ஆளுமைக்கு உலகளாவிய ரீதியில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளதை இந்த அழைப்பு உறுதிப்படுத்துகிறது.
இரண்டாவதாக, இலங்கையில் பயங்கரவாதம் பௌதீக ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அதன் சித்தாந்தம் உலகளவில் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகத் தாங்கள் நீண்டகாலமாக கூறிவந்த விடயம் இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அரசியல் முகாம் முன்னெடுக்கும் தேசியவாத அரசியல் கொள்கைக்குக் கிடைத்த பெறுமதியாகவே இந்த எதிர்ப்பை தாம் கருதுவதாக மேலும் தெரிவித்தார்.
