யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கட்டைக்காட்டைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கரைவலை மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்காக லீசிங் அடிப்படையில் உழவியந்திரத்தை கொள்வனவு செய்துள்ளார்.
குறித்த திகதியில் லீசிங் தொகையை கட்டி முடிக்கவில்லையெனக் கூறி லீசிங் நிறுவனத்தினர் மருதங்கேணி பொலிசாருடன் குறித்த பிரதேசத்திற்கு நேற்று (27) சென்றுள்ளனர்.
இதன் போது மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க , பெண் என்றும் பாராமல் தம்மை மிகக் கேவலமாக நடத்தியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உழவியந்திரத்தை ஒப்படைக்காவிடில் உன்னையும் உனது குடும்பத்தையும் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைப்பதாகவும் பொலீஸ் அதிகாரி திசாநாயக்க மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணை துண்டு கொண்டு வருகை தந்த மருதங்கேணி பொலிசார், தான் குளித்துவிட்டு உடுப்பை மாற்றக் கூட விடாமல் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார் .
பொய் குற்றச்சாட்டில் என்னையும் எனது குடும்பத்தையும் கைது செய்து சிறையில் அடைப்பதாக மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க மிரட்டி விட்டு சென்றதுள்ளதால் எனது குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் குறித்த பொலிஸ் உப பொலிஸ் அதிகாரியே பொறுப்பெனவும் பாதிக்கப்பட்ட பெண் மேலும் தெரிவித்தார்