வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அரசியல், வரலாற்று மற்றும் சமகாலப் அரசியல் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
மேலும் தமிழ்த் தேசிய அரசியலின் எதிர்காலப் பாதைகள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாட்டில் பங்கேற்று வரலாற்றுப் பொறுப்பை பகிர்ந்து கொள்ளுமாறு உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களை உரிமையோடு அழைக்கின்றோம்.
