ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கொழும்பு மாநகர மேயர் மொஹமட் முஸாமிலின் 47 வயதுடைய மகன் மொஹமட் நிஷாம் ஜமால்தீன், நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டெம்பர் 02ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL-503 விமானம் மூலம் லண்டன் செல்ல விமான நிலையத்திற்கு வந்தபோது குடிவரவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நிதி மற்றும் மோசடி குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையொன்றுடன் தொடர்புடையதாக அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பயணத் தடை அமுலில் இருந்த நிலையிலும் நாட்டை விட்டு வெளியேற முயன்றதால் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
