
பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
19ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர்கள் குழாமுடன் விஜயம் செய்து, அபிவிருத்தியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்திற்கு விமான துறை சார்ந்த பணியாளர்களை வடக்கில் இருந்து அதிகளவாக நியமித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக விமானத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து ஆளுநர் செயலகத்தில் கூட்டம் ஒன்றினையும் நடாத்தி இருந்தனர். அதன் பின்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் பார்வையிட்டனர்.
பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு மற்றும் வசதிகள் போதாமல் உள்ளமை தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டு, அபிவிருத்திகளை விரைவுபடுத்தல் போன்றன பற்றியும் இங்கே கலந்துரையாடினார்கள்.
சர்வதேச விமான நிலையமாக இருக்கின்ற பலாலி விமான நிலையத்தில் தற்போது அடிப்படை வசதிகள் குறைவாக காணப்படுகின்றன. அதை நிவர்த்தி செய்வதற்கு இரண்டு கட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
ஒரு அபிவிருத்தி ஏற்கனவே ஆரம்பித்த நிலையில் மற்றைய அபிவிருத்தி எதிர்வரும் ஜூன் மாதம் அளவில் ஆரம்பித்து, இந்த விமான நிலையம் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு விமான நிலையமாக மாற்றப்படும் என்றார்.
