சென்னை: தமிழக காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 630 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. முதல்வர் விஜய் 72 பேருக்கு பதக்கங்களை வழங்கி கவுர வித்தார். மீதமுள்ள 558 பேருக்கு காவல் துறை அதிகாரிகள் பதக்கங்களை அணிவித்து பாராட்டினர்.
காவல் துறை அதிகாரிகள், போலீஸாருக்கு குடியரசு தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் பதக்கங்கள் வழங்கும் விழா, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவரை தலைமைச் செயலர் எம்.சாய்குமார், சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் மூத்த காவல் துறை அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இதையடுத்து, திறந்த ஜீப்பில் நின்று அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக காவல் துறையின் பல்வேறு சிறப்புப் பிரிவு போலீஸார் கம்பீரமாக அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.
