வரும் மாதங்களில் மிதமான அல்லது வலுவான எல் நினோ வானிலை நிகழ்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. வானிலை ஆய்வு மையம் , இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கு 80% சாத்தியக்கூறு இருப்பதாகக் கணித்து செவ்வாய்க்கிழமை ஒரு புதுப்பிப்பை வெளியிட்டது.
உலக வானிலை அமைப்பின் (WMO) கூற்றுப்படி, எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் கடல் வெப்பநிலையின் காலமுறை வெப்பமயமாதல் ஆகும், இது பொதுவாக ஒன்பது முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் .
இந்த வானிலை அமைப்பு, உலகெங்கிலும் வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுத்து , உலகின் சில பகுதிகளில் மழைப்பொழிவை அதிகரித்து, மற்ற பகுதிகளில் வறட்சியைத் தூண்டுவதோடு, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் சூறாவளி உருவாவதையும் ஊக்குவிக்கக்கூடும்.
ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் எல் நினோ நிகழ்வதற்கு 80% வாய்ப்பு இருப்பதுடன், அது தொடங்கினால், குறைந்தபட்சம் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான நிகழ்தகவு “90% அல்லது அதற்கு மேல் இருப்பதாக உலக வானிலை ஆய்வு மையம் (WMO) தெரிவித்துள்ளது.
எல் நினோவின் உச்சபட்ச வலிமை மற்றும் அது நிகழும் நேரம் குறித்து சில நிச்சயமற்ற தன்மைகள் நீடித்தாலும், பெரும்பாலான முன்னறிவிப்பு மாதிரிகள் அது குறைந்தபட்சம் மிதமானதாகவும், ஒருவேளை வலுவானதாகவும் இருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன,” என உலக வானிலை ஆய்வு மையம் (WMO) கூறியது.
மிகவும் கடுமையான சூழ்நிலைக்குத் தயாராவது விவேகமானது என உலக வானிலை அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
வறட்சி மற்றும் கனமழையை மேலும் தீவிரப்படுத்தி, நிலத்திலும் கடலிலும் வெப்ப அலைகளின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய, வலுவான எல் நினோ நிகழ்வுக்கு நாம் தயாராக வேண்டும்,” என்று உலக வானிலை அமைப்பின் (WMO) பொதுச்செயலாளர் செலஸ்டே சௌலோ கூறினார்.
கொசுக்கள் அல்லது உண்ணிகள் போன்ற பூச்சிகளால் பரவும் நோய்களின் அதிகரிப்பு, அத்துடன் உணவு மற்றும் நீர் விநியோகம் குறைதல் போன்றவையும் இதர தொடர்புடைய அபாயங்களில் அடங்கும்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய, அபாயத்தில் உள்ள கோகோ போன்ற பயிர்களும் வழக்கத்திற்கு மாறாக மோசமான அறுவடையைச் சந்திக்கக்கூடும்.
