குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு, அதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட 2 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்ட ஈட்டைச் செலுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21 ஆம் திகதி குறித்த நபர் உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பாதுகாப்பு கருதி திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகத் துண்டிக்கப்பட்டது.
பின்னர் காவல்துறையினர் அவரது குடும்பத்தினரைச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர் கீழே இறங்கினார்.
உடனடியாக அவரைக் கைது செய்த காவல்துறையினர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர்.
இந்தச் சம்பவத்தால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நிதி இழப்பு குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, 2 மணி நேர மின்வெட்டால் இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்திற்குச் சுட்டிக்காட்டினர்.
விசாரணையின் போது சந்தேகநபர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
