இலங்கையில் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) ஆகிய நோய்த்தொற்றுகள் பரவுவதை முழுமையாக ஒழித்ததற்கான உலக சுகாதார அமைப்பின் முதலாவது உலகளாவிய அங்கீகாரத்தை இலங்கை கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே பெற்றிருந்தது.
தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 79ஆவது உலக சுகாதார மாநாட்டின் போது, கடந்த பல வருடங்களாக இந்த நிலையை இலங்கை வெற்றிகரமாகத் தொடர்ந்து பராமரித்து வருவதை பாராட்டி, அதற்கான உயரிய மறுமதிப்பீட்டுச் சான்றிதழை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வழங்கியுள்ளார்.
1950 முதல் தொடரும் அடித்தளம்: கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிபிலிஸ் பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இலங்கையில் 1950ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு, 2009இல் அது மேலும் பலப்படுத்தப்பட்டது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தடுப்புத் திட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு என்ற கூட்டுத் திட்டம் தேசிய மட்டத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இலங்கையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்களில் 95% க்கும் அதிகமானோருக்கு எச்.ஐ.வி பரிசோதனைகளும், 99% க்கும் அதிகமானோருக்கு சிபிலிஸ் பரிசோதனைகளும் ஆரம்ப காலத்திலேயே இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் விளைவாக, கடந்த சில வருடங்களாக இலங்கையில் எச்.ஐ.வி அல்லது சிபிலிஸ் தொற்றுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பூச்சிய நிலையை எட்டியுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் இந்தத் தகைமையைத் தக்கவைத்துள்ள மிகச்சில நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்தத் திட்டத்தை அடிமட்டத்திலிருந்து வழிநடத்திய தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்மற்றும் குடும்ப சுகாதாரப் பணியகம் ஆகியவற்றின் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டினார்.
உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க சான்றிதழ், இலங்கையின் இலவச பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் சர்வதேசத் தரத்திற்குச் சான்றாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
