பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பொதுமக்களின் பாவனைக்காக பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மாதத்தில் சில நாள்கள் கடும் கட்டுப்பாடுகளுடனும், பின்னர் எந்தத் தடையும் இன்றியும் வழிபாடுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கான பாதை விடுவிக்கப்படவில்லை. தனியார் காணிகள் மற்றும் பிறிதொரு ஆலயக் காணி என்பவற்றை ஊடறுத்து அமைக்கப்பட்ட தற்காலிகப் பாதை ஊடாகவே மக்கள் இதுவரை இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்குச் சென்று வந்தனர்.
இந்த நிலையில் ஆலயத்துக்கான பாதையை விடுவிக்குமாறு மக்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே, பாதையை மக்களின் பயன்பாட்டுக்காக விடுவிப்பதற்கு கட்டளைத் தளபதி இணக்கம் வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் இரவு 10 மணிவரை இந்தப் பாதை விடுவிக்கப்படவுள்ளது.
