ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டதற்கான முக்கிய சூத்திரதாரி தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே வெளிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளிவந்தவண்ணமுள்ளது.
இந்நிலையில் சுரேஸ் சாலே தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்குமாறும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சுரேஸ் சாலே இன்று (20) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
