வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த மேலும் ஒரு தாய், நீதி கிடைக்காமலேயே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்மணி நேற்று காலமானார்.
05.09.1951 அன்று பிறந்த அவர், தனது குடும்ப உறுப்பினருக்காக மட்டுமன்றி வடக்கு கிழக்கெங்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்காக நீதி கோரி இடம்பெற்ற பல்வேறு போராட்டங்கள், கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊடக சந்திப்புகளில் தொடர்ந்து பங்கேற்று வந்துள்ளார்.
மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து செயல்பட்ட அவர், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் குரல் கொடுத்துவரும் போராட்டத் தாய்மார்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இவரின் மறைவு, பல ஆண்டுகளாக நீதி தேடி தொடர்ச்சியாக போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
