பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பள்ளிகளில் புத்தகங்களுக்குப் பதிலாக டேப்லெட்டுகள்(Tablets), கையெழுத்திற்குப் பதிலாக டிஜிட்டல் பணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கல்வியின் எதிர்காலம் திரைகளில்தான் உள்ளது என்று கருதப்பட்டது. ஆனால் இன்று ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே, பிரான்ஸ், இத்தாலி மற்றும் டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் அந்த அணுகுமுறையை மாற்றத் தொடங்கியுள்ளன.
அவை மீண்டும் அச்சுப் புத்தகங்கள், கையெழுத்து மற்றும் பாரம்பரிய வாசிப்பு முறைகளை பள்ளிகளில் அதிகப்படுத்தி வருகின்றன.
இதற்குக் காரணம் பழைய முறையின் மீதான பாசம் அல்ல. ஆய்வுகளின்படி, கையால் எழுதுவதும் அச்சுப் புத்தகங்களை வாசிப்பதும் நினைவாற்றல், கவனச்செலுத்தும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்துகின்றன என்று தெரியவந்துள்ளது.
2023ம் ஆண்டு ஸ்வீடன், பள்ளிகளில் டேப்லெட் பயன்பாட்டை கட்டாயமாக்கும் திட்டத்தை நிறுத்தி, நூற்றுக்கணக்கான மில்லியன் குரோனர்களை அச்சுப் புத்தகங்களுக்காக ஒதுக்கியது.
அதைத் தொடர்ந்து டென்மார்க் 540 மில்லியன் குரோனர்களை முதலீடு செய்து, டேப்லெட்டுகளுக்குப் பதிலாக அச்சுப் புத்தகங்களை வழங்கத் தொடங்கியது.
மேலும், 2027க்குள் பள்ளிகளை முழுமையாக மொபைல் இல்லாத கல்விச் சூழலாக மாற்றும் இலக்கையும் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, மீண்டும் காகித நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பென்சில் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.
நார்வேயின் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் கற்றல் நேரத்தில் மொபைல் சாதனங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஃபின்லாந்தும் 2024ல் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது.
ஒரு காலத்தில், “அதிக தொழில்நுட்பம் = சிறந்த கல்வி” என்ற எண்ணம் பரவலாக இருந்தது, ஆனால் இன்று, உலகின் முன்னேறிய கல்வி அமைப்புகளே ஒரு புதிய கேள்வியை எழுப்புகின்றன: பல நூற்றாண்டுகளாக மாணவர்கள் பயன்படுத்தி வரும் சிறந்த கற்றல் கருவி. ஒரு புத்தகம், ஒரு பென்சில், மற்றும் முழு கவனம் செலுத்தும் திறன்தானோ?
