தமிழின அழிப்பில் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்டு வருகின்றது.
இதன்போது “முள்ளிவாய்க்கால் பேரவலம் – 2026“ எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொள்கைப் பிரகடனம் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினரால் வாசிக்கப்பட்டது.
இந்த கொள்கைப் பிரகடனத்தில், தமிழின அழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழின அழிப்பு செயன்முறை ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பரிணாமத்தைக் கொண்டது.
பேரரசு கட்டமைப்பின் புவிசார் நலன்களுக்காகவும் சிங்கள பௌத்த பேரினவாத ஏகாதிபத்தியத்தை தக்க வைப்பதற்காக கூட்டுத் தமிழின அரசியல் வேணவாவை அதன் ஆயுத பரிணாமத்தை தமிழின அழிப்பிற்கு ஊடாக முடிவுக்கு கொண்டு வந்ததன் மாயை முள்ளிவாய்க்காலில் நிகழும் தமிழின அழிப்பு நினைவுகூரல் தகர்த்து எறிகின்றது.
17 ஆண்டுகள் கடந்தும் இம்மண்ணிலே கொத்து கொத்தாக கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்களின்றி ஆகாயமே எல்லையாக அவர்களின் கனவுகளை சுமந்து வரும் காற்றே சாட்சியாக இரத்தம் தோய்ந்த மண்ணில் தேசத்திற்கான கனவுகளைச் சுமந்து அடக்குமுறையை எதிர்த்து விடுதலைப் பயணத்தை கூட்டாக தொடர ஒரு தேசமாக முள்ளிவாய்க்கால் திடலில் ஒன்றுகூடியுள்ளோம்.
எமது கூட்டு அரசியல் கோரிக்கைகள் நியாயமானவை. அற தாற்பரியம்கொண்டவை. இவை இன்னொரு கூட்டுக்குழுமத்தின் கூட்டுத்தனி இருப்பை அச்சத்திற்கு உள்ளாக்கவில்லை என்பதை மீள வலியுறுத்துகின்றோம்.
பேரரசுக் கட்டமைப்பின் வல்லாதிக்க போக்கினையும் ஏகதுருவ உலக ஒழுங்கையும் தக்க வைப்பதற்காக ஐக்கிய அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் பல்துருவ பூகோள ஒழுங்கை கட்டமைப்பதற்காக சீனா, ரஷ்யா போன்ற ஏனைய நாடுகளும் தத்தமது புவிசார் நலன்களை முன்னிறுத்தி போரினை முன்னெடுத்து வருகின்றன.
புதிய உலக ஒழுங்கு கட்டமைப்பு, நவதாராளவாத ஏகாதிபத்திய சட்டகத்திற்குள் இருந்தே கட்டமைக்கப்பட்டால் பூர்வீகக் குடிகளின் இருப்பு தொடர்ந்தும் கேள்விக்கு உட்பட்டது
ஏகதுருவத்திலிருந்து பல் துருவ உலக ஒழுங்கினாலும் அது பேரரசு கட்டமைப்புச் சட்டத்தில் இருந்து மாறுபடப் போவதில்லை. இவ்வாறு மாறுபடுகின்ற உலக ஒழுங்கிற்கு ஏற்ப நமது கூட்டு விடுதலை வழித்தடத்தின் தந்திரோபாய உத்திகளை மாற்ற வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் கூட்டு அரசியல் வேணவாவின் கோரிக்கைகள் விட்டுக்கொடுப்பின்றி தந்திரோபாய உத்திகள் மீளமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாறு இன்று எங்கள் முன் வைத்துள்ளது.
தமிழ் தேசிய விழுமிய அடிப்படைகள் மாற்று உலக ஒழுங்கிற்கான முன்மொழிதல்கள் என்பதையும் பேரரசு கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டது என்பதையும் தமிழ் தேசிய வரலாற்று பட்டு அறிதலுக்கு உட்பட்டு நாம் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய ஐந்து அம்சங்களாக பின்வருவன வரையறுக்கப்பட்டுள்ளன.
1. சிங்கள பௌத்த மயமாக்கப்படும் தமிழர் தாயகத்தை தடுக்கவும் தமிழ் தேசியத்தை நாளாந்த வாழ்வியலாக்கவும்.
2. தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டி அரச பொறுப்பையும் மேற்குலக நாடுகளின் உடந்தை தன்மையையும் வலியுறுத்தி குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவும்.
3. தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்கு உரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையான்மையினதும் ஒருபோதும் பராதீனப்படுத்த இயலாத சுயநிர்ணய அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தவும்.
4. கூட்டு ஈழத்தமிழர் இருப்பின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை தடுக்கவும்.
5. தமிழ் தேசிய நம்பிக்கையின் மீது உறுதி கொண்டு ஒரு குடையின் கீழ் தமிழின அடக்குமுறைக்கு எதிராக தமிழின விடுதலையை நோக்கி முனைப்புடன் தொடர்ந்து போராட நமது மக்கள் பலத்தை நம்பி தொடர்ந்து அடிபணியாது போராடுவோம்.
