வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார். அது தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெறவுள்ள பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு , உடனடியாக விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்
யாழில். இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உள்ள இராணுவ கட்டமைப்பை எவ்வாறு மறுசீரமைத்து , மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்
யாழ்ப்பாண கலாச்சாரம்
இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆராய்வதற்கே வடமாகாண ஆளுநர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய உயர் மட்ட குழு மக்களின் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம் தொடர்பில் ஆராய்ந்து அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்
அதில் முக்கியமாக விமான நிலைய விஸ்தரிப்புக்கு தேவையான காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன் போது , விமான நிலையத்திற்கு என முன்னரே பெறப்பட்ட காணிகளுக்கான நஷ்ட ஈடுகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அத்துடன் விமான நிலைய விஸ்தரிப்புக்காக எத்தனை ஏக்கர் காணி தேவை என்பது தொடர்பில் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளோம்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அடுத்த விமான நிலையமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அமைக்கவே எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதனால் அவற்றுக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக்கொண்டு , அக்காணிகளுக்கான இழப்பீடுகளை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன் , ஏனைய காணிகளை மக்களிடமே மீள கையளிப்போம்.
துரித நடவடிக்கையாக வலி. வடக்கில் சில இடங்களில் இராணுவ முகாம்கள் இல்லாது , இராணுவம் வெளியேறிய பின்னரும் , அவை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
அத்துடன் வழிபாட்டு தளங்கள் , பாடசாலைகள் என்பவற்றையும் அடையாளப்படுத்தி அவற்றையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு தொடர்பில் எம்மால் கால எல்லையை கூற முடியாது. இதற்கான பொறிமுறைகள் உள்ளன. தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் வந்து ஆராய்ந்து சென்றுள்ளார். அதன் பிரகாரம் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு கூட்டத்தில் இவ்விடயங்கள் ஆராயப்பட்டு , உடனடியாக விடுவிக்க கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் , மற்றைய காணிகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும். அதனால் கால எல்லையை எம்மால் கூற முடியாது என மேலும் தெரிவித்தார்.
