சவூதி அரேபியாவின் மேல் மாகாணத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு ஜெத்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
கைப்பேசிகளுக்கு National Warning Alerts கிடைக்கும் சந்தர்ப்பங்களில், உடனடியாகச் செயல்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டிடங்களுக்குள் இருப்பவர்கள்: ஜன்னல்கள், கண்ணாடிகள், பால்கனிகள் மற்றும் கூரைகளிலிருந்து விலகி பாதுகாப்பான இடத்தில் தங்கவும்.
வெளியில் இருப்பவர்கள்: அருகிலுள்ள பாதுகாப்பான கட்டிடத்திற்குள் செல்லவும் அல்லது பலமான சுவரின் பின்னால் பாதுகாப்பாக ஒதுங்கவும்.
பொது இடங்கள்: மக்கள் அதிகளவில் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.
வாகனம் ஓட்டும்போது: வீதியின் ஓரமாக வாகனத்தை நிறுத்தி, பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களிலிருந்து விலகி இருக்கவும். மேலும், சம்பவங்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பது, அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மற்றும் கருத்துகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் துணைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பாமல், அதிகாரிகளின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும், சவூதி அரேபியாவின் சட்டதிட்டங்களை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
