செம்மணி கூட்டுப் புதைகுழி உண்மைக்குச் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்து! தனது ஐரோப்பியப் பயணத்தின் ஒரு பகுதியாக, நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேச பங்குதாரர்களுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் சந்திப்புகளின் அங்கமாக அமைந்த இக்கலந்துரையாடலில், இலங்கையின் சமகால அரசியல், மனித உரிமை நிலைமைகள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையின் மிகப்பெரிய கூட்டுப் புதைகுழி செம்மணி: இச்சந்திப்பின் முக்கிய அம்சமாக யாழ்ப்பாணம் செம்மணி கூட்டுப் புதைகுழி விவகாரம் அமைந்தது. அகழ்வாராய்ச்சிகளின் போது இதுவரை 380-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளதன் மூலம், செம்மணி இலங்கையின் மிகப்பெரிய கூட்டுப் புதைகுழியாக மாறியுள்ளதை நோர்வே அதிகாரிகளுக்குச் சாணக்கியன் எம்பி சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளில் முன்னேற்றம் இல்லாதது குறித்து கவலை வெளியிட்ட அவர், இவ்வளவு பெரிய தடயவியல் விசாரணையை முன்னெடுப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தற்போதைய இலங்கை அரசிடம் இல்லை எனவும், சர்வதேச தரத்திலான சுயாதீன விசாரணையை உறுதிப்படுத்தச் சர்வதேச தடயவியல் நிபுணத்துவத்தை அரசு பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், 1998ஆம் ஆண்டு செம்மணி புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பாதுகாப்பாக உள்ளதால், சர்வதேச ஒத்துழைப்புடன் டி.என்.ஏ. (DNA) பரிசோதனைகளை இலங்கை அரசு உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் தொடர்ச்சியான தாமதம், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்தும் இதன்போது விளக்கமளித்தார்.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக 2024 டிசம்பரில் கொழும்பில் உள்ள நோர்வே தூதுவரிடம் தான் முன்வைத்த வாழ்வாதார யோசனைகளுக்கு, இலங்கை அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் சாணக்கியன் எம்பி நினைவூட்டினார்.
ஒஸ்லோவில் நடைபெற்ற இந்தச் சந்திப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இப்பயணத்தின் போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல்வேறு சர்வதேச ஜனநாயக நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த அவர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) அரசியல் கட்டமைப்பு மேம்பாடு, இளைஞர் ஈடுபாடு மற்றும் நிறுவனத் திறன் வளர்ப்பு போன்ற துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
