பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை மற்றும் இதர நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக புகார்களைப் பதிவு செய்வதற்கான புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
“பொதுமக்கள் பாதுகாப்பு உதவி மையம்” (Public Security Help Desk) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தளத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை இனி எளிதாகத் தெரிவிக்க முடியும்.
இந்த புதிய இணையதளத்தில் புகார்களைப் பதிவு செய்வதுடன், அதற்கு ஆதாரமாக புகைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளையும் (Audio) பொதுமக்கள் பதிவேற்றம் செய்ய முடியும்.
மேலும், தாங்கள் சமர்ப்பித்த புகார்களின் தற்போதைய நிலை மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் என்ன என்பதை ஆன்லைன் மூலமாகவே தொடர்ந்து கண்காணிக்கும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுடன், இந்தத் தளத்தின் வாயிலாக பொதுமக்கள் நேரடியாக அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரைத் தொடர்புகொள்வதற்கான சிறப்பு வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆன்லைன் நடைமுறை பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தாமதமின்றி, மிக விரைவாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
