இலங்கை–இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (18) அம்பாறையில் நடைபெற்றது.
இந்தியா–இலங்கை வர்த்தகக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.
இதில் சுமார் 40 இந்திய முதலீட்டாளர்கள் உள்ளிட்ட வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது முதலீட்டு வாய்ப்புகள், இறக்குமதி–ஏற்றுமதி வர்த்தகம், சர்வதேச சந்தை வாய்ப்புகள் மற்றும் கூட்டு வர்த்தக முயற்சிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்திய முதலீட்டின் மூலம் இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துவதுடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தில் இலங்கையில் பால் உற்பத்தித் துறையில் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாக இந்திய முதலீட்டாளர்கள் தெரிவித்ததுடன், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
