சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் ஆரம்பத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனோஜன் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட குமார் ஜெயக்குமாரன், அனோஜனின் நிலைமை தொடர்பில் அவசரமாக தலையிட்டு, சவூதி அரேபிய அதிகாரிகளுடன் தேவையான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.
அனோஜனின் வழக்கின் முழுமையான சட்ட நிலைமை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படைகளை உரிய முறையில் ஆராய்ந்து, அவருக்கு தேவையான சட்ட உதவி, தூதரக உதவி மற்றும் இராஜதந்திர ஆதரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமார் ஜெயக்குமாரன் குறிப்பிட்டுள்ளார்.
