கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.
கியூப விமானப்படையின் போர் விமானங்கள் இரண்டு அமெரிக்கப் பயணிகள் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதில், மியாமியைத் தளமாகக் கொண்ட சகோதரர்கள் மீட்புக்கு (Brothers to the Rescue) என்றழைக்கப்படும் காஸ்ட்ரோ எதிர்ப்பு மனிதாபிமானக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கியூபா அதிபர் மிகுவல் தியாஸ்-கானெல் பெர்முடெஸ் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கண்டித்து, இது எந்தவொரு சட்ட அடிப்படையுமற்ற ஒரு அரசியல் சூழ்ச்சி என்று குறிப்பிட்டார்.
1996-ஆம் ஆண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பான நிகழ்வுகளை அமெரிக்கா பொய் கூறி, திரித்துக் கூறியதாகவும் தியாஸ்-கானெல் குற்றம் சாட்டினார்.
நீண்டகால கியூபா அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் சகோதரரான ரவுல் காஸ்ட்ரோ, பராக் ஒபாமாவின் அதிபர் பதவிக்காலத்தில் 2015-ல் அமெரிக்காவுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லுறவை மேற்பார்வையிட்டார். பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் 2017-ல் அந்த நடவடிக்கையைத் தலைகீழாக்கினார்.
நீதிமன்றப் பதிவுகளின்படி, மியாமியில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிக்கையில், அமெரிக்கக் குடிமக்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது ஒரு குற்றச்சாட்டும், நான்கு கொலைக் குற்றச்சாட்டுகளும், இரண்டு விமானங்களை அழித்த குற்றச்சாட்டுகளும் அடங்கியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தக் குற்றச்சாட்டை ஒரு மிகப்பெரிய தருணம் என்று வர்ணித்ததோடு, வாஷிங்டன் கியூபாவை விடுவிக்கிறது என்றும் கூறினார்.
கியூபாவின் நிலைமைக்கு அடுத்து என்ன நடக்கும் என்று தனக்குத் தெரியாது என்று கூறிய அதேவேளையில், அந்நாட்டில் பதற்றம் “அதிகரிக்கும்” வாய்ப்பையும் டிரம்ப் நிராகரித்தார்.
அமெரிக்கா தன் குடிமக்களை மறக்காது, மறக்கப் போவதும் இல்லை என்பதற்கு இந்தக் குற்றப்பத்திரிக்கையே சான்று என அமெரிக்காவின் தற்காலிக தலைமை வழக்கறிஞர் டாட் பிளான்ச் கூறினார்.
ஸ்பானிய மொழியில் வெளியான ஒரு காணொளியில், கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மீது திருட்டு, ஊழல் மற்றும் அடக்குமுறை குற்றச்சாட்டுகளை ரூபியோ முன்வைத்தார்.
உங்கள் நாட்டை யார் ஆள வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கும், அவர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் அவர்களை மாற்றுவதற்கு வாக்களிப்பதற்கும் உங்களுக்கு உண்மையான வாய்ப்பு கிடைக்கும் ஒரு புதிய கியூபா,” என்று, கியூபாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த பெற்றோரின் மகனான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ கூறினார்.
எண்ணெய் பற்றாக்குறையால் நாளின் பெரும்பகுதிக்கு மின்சாரம் இல்லாமல் இருப்பது உட்பட, கியூபர்கள் சந்தித்து வரும் “கற்பனை செய்ய முடியாத இன்னல்களை” ரூபியோ தொடர்ந்து ஒப்புக்கொண்டார் .
அமெரிக்க வெளியுறவுச் செயலாளரின் கூற்றுப்படி, கியூபாவின் இராணுவ ஆதரவு பெற்ற பெருநிறுவனமான கேசா, சாதாரண குடிமக்களைத் துன்புறச் செய்து, நாட்டின் மேட்டுக்குடியினரைச் செல்வந்தர்களாக்கிய குற்றத்தைச் செய்துள்ளதுடன், அதனை ஒரு அரசுக்குள் ஒரு அரசு என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ரூபியோவின் அறிக்கை மேலோட்டமானது மற்றும் தவறான தகவல்களைக் கொண்டது என்று கூறி, கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் அதற்கு எதிர்வினையாற்றினார்.
