தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் ‘SLNS தம்மன்னா’ முகாமைச் சேர்ந்த கடற்படையினர் வழமையான கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த மணல் திட்டில் இளைஞர் ஒருவர் தனியாக இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற கடற்படையினர், இளைஞரை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட இளைஞரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கடற்படையினர் அவருக்கு உடனடியாக தேவையான குடிநீர், உணவு மற்றும் தற்காலிக இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கியுள்ளனர்.
கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் தென்னிந்தியாவில் இருந்து கடல் வழியாக பயணம் செய்து இலங்கை கடற்பரப்பை வந்தடைந்தவர் என தெரியவந்துள்ளது.
முதலுதவி மற்றும் தேவையான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அந்த இளைஞர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
