தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விடும் நோக்கத்தோடு தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பாக பேசப்பட்டது.
2020 நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து புற்றுநோய் வைத்தியசாலையை முழுமையாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில் தமிழ் தேசிய கட்சி என்ற வகையில் தாயக நிலப்பரப்பிலுள்ள மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிர்வாக கட்டமைப்புகளை மத்திக்குள் கொண்டு செல்வதை நாங்கள் விரும்பவில்லை.
ஒற்றையாட்சிக்குள் மத்திய அரசு அதற்கான பணம் மற்றும் அங்கீகாரத்தை வழங்காமல் இருக்கும் போது மாகாண சபை கட்டமைப்புக்கள் இயங்க முடியாமல் போகும்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தற்போது மாகாண சபை கட்டமைப்புக்குள் காணப்படுகிறது. அதற்கு கீழ் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையும் இயங்கி வருகிறது.
புற்றுநோய் வைத்தியசாலைக்குரிய தேவைப்படுகின்ற ஆளணி மற்றும் விசேட ஏற்பாடுகள் ஆதார வைத்தியசாலை கட்டமைப்புக்குள் வைத்திருக்க முடியாத நிலையில், நடைமுறையிலே புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்ற ஆளணி மற்றும் வைத்தியர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வழங்கப்படுகிறது.
அதே நேரம் தாதிய உத்தியோகத்தர்கள் ஆதார வைத்தியசாலையில் இருந்து நியமிக்கப்படுகிறார்கள்.
ஆதார வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்ற தாதிய உத்தியோகத்தர்கள் ஆதார வைத்தியசாலைக்கே போதுமானதாக இல்லாமல் இருக்கிறது.
இந்த நிலையில் தான் புற்றுநோய் வைத்தியசாலை விசேடமாக இயங்க வேண்டிய இடத்தில் ஆதார வைத்தியசாலைக்குள் தொடர்ந்து வைத்திருப்பது ஒன்றுமே செய்ய முடியாத நிலை காணப்படும்.
புற்று நோயாளர்கள் உயிராபத்தில் இருக்கும் நிலையில் இந்த பற்றாக்குறை சகிக்க முடியாத ஒரு காரணத்தை நலன்புரி சங்கமும் வைத்தியர்களும் கூறியிருக்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்ட போது வைத்தியர் சிறீபவானந்தராஜா இந்த யதார்த்தத்தை சுட்டிக்காட்டி ஆதார வைத்தியசாலையையும் புற்றுநோய் வைத்தியசாலையும் மத்திய அரசுக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று யோசனையை முன் வைத்தார்.
அப்போது தேசிய மக்கள் சக்தி அல்லாத அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பிரதிநிதிகளும் அந்த புற்றுநோய் வைத்தியசாலை பிரிவை விசேட பிரிவாக அங்கீகரித்து முழுமையாக இயங்கச் செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதை மத்திக்குள் கொண்டு சென்று இயங்குவதற்கும் இணக்கம் தெரிவித்து ஆதார வைத்தியசாலையை மாகாண சபைக்குள் வைத்திருந்து செயற்ப்படுத்த நாங்கள் இணக்கம் தெரிவித்திருந்தோம்.
ஆனால் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சிறீபவானந்தராஜா அனைத்துமே மத்திக்குள் கொண்டு போக வேண்டும் என்ற கருத்தை தெரிவித்தார். அந்த முடிவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப் போவதாக அறிவித்தார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா இராமநாதன், தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையை விசேட பிரிவாக மத்திக்குள் கொண்டு போவதை முழுமையாக எதிர்த்த மாகாணத்திற்குள் உள்ள விடயத்தை கொண்டு போக முடியாது என்றார்.
ஆனால் சிறீபவானந்தராஜா கருத்து தெரிவித்த இடத்தில் அதனை ஆமோதித்தார். இது அர்ச்சுனா இராமநாதனுடைய நிலைப்பாடாக இருக்கிறது.
மாகாண சபைகள் தொடர்பாக எனக்கு இருக்கும் விமர்சனமே, அரசாங்கம் திட்டமிட்டு மாகாண சபைக்கு கீழ் இருக்கின்ற அனைத்து விடயங்களையும் நிதி வழங்காமல் திட்டமிட்டு தோற்கடிக்க பண்ணுகின்ற வேலையை செய்து, மாகாண சபையே தேவையில்லை என்ற நிலைமையை திட்டமிட்டு உருவாக்குவது தான் இதற்கு முதல் இருந்த அரசாங்கங்கள் செயல்பட்டது.
பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகள் சம்பந்தமாக இதனையே பின்பற்றுகின்றனர்.
ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைக்கு போதிய அதிகாரம் இல்லாமல் மத்தியில் தங்கி இருக்க நிலையில் தான், மாகாண சபை என்று மாயை வைத்து ஏதோ இருப்பதாக காட்டிக் கொண்டுள்ளனர்.
மத்தியின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஏனைய மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளுடன் ஒப்பிடும்போது ஆளணியும் போதுமானதாக இல்லாமல் நிதியும் வழங்காமல் அரசாங்கம் நடத்துகிறது.
யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு இன்று சென்றாலும் அரை வாசி பேர் நிலத்தில் படுத்துக் கொண்டிருப்பார்.
அப்படிப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது யாழ்ப்பாணத்திற்கு வந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்திய சாலையாக நாங்கள் தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அவ்வாறு வாக்குறுதியளித்தும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேவையான வளங்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்காமல் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெறும் பெரும்பாலான அபிவிருத்திகள் புலம்பெயர் தமிழ் மக்கள் தங்களுடைய செல்வாக்கையும் வளங்களையும் பயன்படுத்தி, நிதிகளையும் அன்பளிப்புகளை வழங்கி இயங்குகிறதே ஒழிய உண்மையில் அரசு அதற்கு போதுமான நிதி வழங்காத நிலையில் தான் அது இயங்கி வருகிறது.
இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையை முழுமையாக மத்திக்குள் கொண்டு செல்வது என்பது இந்த பற்றாக்குறைகளைபயன்படுத்தி மக்களை ஏமாற்றி அதை மத்திக்குள் சுரண்டுவதற்கான அணுகுமுறையாக தான் இருக்கிறது.
கடைசி வரை பாதிக்கப்பட்ட அந்த நோயாளர்களுக்கு தீர்வுகளை கொடுக்கும் நோக்கத்தோடு அல்ல. அவர்களின் நோக்கம் நேர்மையானது என்றால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செய்ய வேண்டியதை செய்யலாம்.
ஆதார வைத்தியசாலையை மத்திக்குள் கொண்டு போய் சிங்கள பேரினவாதத்திற்குள் முடக்கிவிட்டு மக்களை நடுத்தெருவில் விடும் நோக்கத்தோடு தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது.
மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். வைத்தியர்களோடும் கலந்துரையாடியே தெரிவிக்கிறோம். இந்த புற்றுநோய் பிரிவை உடனடியாக விசேட அலகாக அங்கீகரித்து அதற்கு தேவையான வளங்களை அனைத்தையும் வழங்குவதே முறைமை.
ஆதார வைத்தியசாலையை இணைத்து கொண்டு செல்வது என்பது உடனடியாக செய்யும் விடயம் அல்ல.
இதற்கு தீர்வு கொடுப்பதாக இருந்தால் மாகாண சபைக்கு கீழ் இருக்கின்ற அத்தனை பாடசாலைகள் வைத்தியசாலைகளுக்கு போதிய நிதிகளை வழங்கலாம்.
அதனை செய்யாமல் மாகாணத்தில் இருக்கக்கூடிய அத்தனை கட்டமைப்புகளை தோற்கடிப்பதற்கு வேலை செய்கிறார்கள் என்றால், மத்தியின் கீழ் போதனா வைத்தியசாலையை மட்டுப்படுத்தி வைத்திருப்பது போல் இதனையும் கொண்டு சென்று மட்டுப்படுத்தி வைத்திருப்பார்கள்.
பொறுப்பு வாய்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத் தேவையிருக்கிறது என மேலும் தெரிவித்தார்.
