இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்வதற்கு நான் மிகவும் கவனமாகவும், சற்று சிரமப்பட்டும் நடிகர்களைத் தேடினேன். நான் பிரான்ஸில் இருந்தபடியே, இலங்கையில் எங்கள் படத்தின் லைன் புரொடூசராகவும் தலைமை பொறுப்பாளராகவும் பணியாற்றிய விமல் ராஜ் அவர்களின் உதவியுடன், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்தேன்.
அந்த வகையில், இந்தப் படத்தில் அம்மா கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. ஒரு திரைப்படத்தில் சில கதாபாத்திரங்களுக்கு ஒரு குறிப்பிட்ட முகமும், அந்த முகத்தின் மூலம் வெளிப்படும் உணர்வும் மிகவும் முக்கியமாக இருக்கும்.
அந்தக் கதாபாத்திரத்திற்காக கேசவராஜா ஐயா அவர்களின் துணைவியார், நாங்கள் அன்பாக “அப்பம்மா” என்று அழைக்கும் அவரை, விமல் ராஜ் அவர்கள் எனக்கு பரிந்துரைத்தார்.
முதலில் அவருடைய புகைப்படத்தைப் பார்த்தபோது, நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வேறு பலரையும் தேடிப் பார்த்தேன். ஆனால் இறுதியில், மீண்டும் மீண்டும் அப்பம்மாவுடைய பெயர்தான் வந்தது.
“அவர் நன்றாக நடிப்பார், நேரத்திற்கு வருவார், படப்பிடிப்பில் நன்றாக ஒத்துழைப்பார். நீங்கள் அவரைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று விமல் ராஜ் அவர்கள் சொன்னார்.
அதன்பிறகு அவரை நேரில் ஒத்திகையில் பார்த்தபோது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என்று உணர்ந்தேன். அதனால் அவரைத் தேர்வு செய்தோம்.
தேர்வு செய்த நாள் முதல் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர் எங்களுக்கு எந்தவிதமான சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. ஒரு பெரிய இயக்குநரின் துணைவியார் என்ற எந்தவிதமான தனிப்பட்ட அடையாளத்தையும் முன்னிறுத்தாமல், ஒரு நடிகையாக மட்டுமே தன்னை அந்தக் கதாபாத்திரத்துக்குள் முழுமையாக ஒப்படைத்தார்.
நாங்கள் எதிர்பார்த்ததை அப்படியே நடித்துக் கொடுத்தார். அதைவிட முக்கியமாக, நான் அவருக்கு கதையையும் திரைக்கதையையும் அனுப்பியபோது, முழுக் கதையையும் படித்துப் பார்த்து, அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “இந்தக் கதையில் நடிக்க வேண்டும்” என்ற ஆர்வத்துடன் அவர் எங்களுக்கு ஒத்துழைத்தார்.
அவருடைய அந்த ஒத்துழைப்பு படத்தின் இறுதி நாள் வரை எங்களுக்கு கிடைத்தது.
குறிப்பாக, டப்பிங் நேரத்திலும் அவருக்கு சில உடல்நலச் சிரமங்கள் இருந்தபோதிலும், அதை பொருட்படுத்தாமல் பொறுப்புடன் வந்து, அவருடைய டப்பிங்கை முழுமையாக முடித்துக் கொடுத்தார்.
அதனால், இந்தப் படத்தில் அப்பம்மா அவர்களை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கொண்டுவர முடிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதைவிட, இந்தப் படத்திற்கு அவர் அளித்த ஒத்துழைப்பு எங்களுக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தது.
எங்கள் ஈழத் திரையுலகில் மதிப்புடன் குறிப்பிடப்படும் இயக்குநர்களில் ஒருவரான கேசவராஜா அவர்களின் துணைவியார் அப்பம்மா அவர்கள். அவரை இந்தத் திரைப்படத்தில் நடிக்க வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.
அவருடைய அன்புக்கும், ஒத்துழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Weniger anzeigen
