சுற்றுலா பாகிஸ்தான் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
தொடரின் முதல் போட்டி இன்று முற்பகல் 10 மணிக்கு தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடருக்கான இலங்கை அணியில், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இதுவரை அறிமுகமாகாத வீராங்கனைகளான சமுதி பிரபோதா மற்றும் சஞ்சனா கவிந்தி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதேவேளை, அண்மையில் நிறைவடைந்த மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடிய அணியுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் அணி எட்டு மாற்றங்களைச் செய்துள்ளது.
அந்த அணியில், துடுப்பாட்ட வீராங்கனைகளான இமான் மற்றும் மஹம் ஆகியோர் இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் முதல் முறையாக இடம்பெறுகின்றனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் மூன்றாவது இருபதுக்கு 20 போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலேயே நடைபெறவுள்ளன.
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பாகிஸ்தானை 2 க்கு1 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி தொடரைக் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது
