இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில், மேலும் ஆறு இலட்சம் அமெரிக்க டொலர் காணாமல் போனமை குறித்துப் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமக்குரிய கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறவில்லை என அமெரிக்க அஞ்சல் சேவை விடுத்த முறைப்பாட்டினைத் தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில், தற்போது மேலதிகமாக இந்தத் தொகையும் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திறைசேரிக்குச் சொந்தமான இந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டமை தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது நீதிமன்றத்தில் முதற்கட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் ஐந்து அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிதி மோசடியின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் மற்றும் இதன் வலையமைப்பு குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .