மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகளின் கீழ் நீண்டகாலமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருங்கிணைந்த அமைப்பாக மட்டக்களப்பு மாவட்ட கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களின் சமாசமும் பதிவு செய்யப்பட்ட, சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பாகும்.
இந்நிலையிலேயே, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் சுயாதீன கூட்டுறவு சங்கங்களை புறக்கணித்து, புதிய சங்கங்களை உருவாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் எமக்கு தீவிரமான சந்தேகங்களையும் கவலைகளையும் ஏற்படுத்துகின்றன. இந்த நடவடிக்கைகள், பண்ணையாளர்களின் ஒற்றுமையையும், சுயாதீன நிர்வாகத்தையும் குறைக்க முயலும் ஒரு திட்டமிட்ட தலையீடாகவே எமக்கு தோன்றுகின்றது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பண்ணையாளர்களின் அடிப்படை தேவையான மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் எமது உறுப்பினர்கள் இடையறாத இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், இந்த முக்கியமான பிரச்சினைக்கு அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்வையும் வழங்கத் தவறியுள்ளது.
இதற்கு பதிலாக, புதிய சங்கங்களை உருவாக்கும் முயற்சி எடுக்கப்படுவது, பண்ணையாளர்களை வலிமையற்றவர்களாக்கும் செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது.
மேய்ச்சல் தரை பிரச்சினை என்பது தனிப்பட்ட பண்ணையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல; அது முழு மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரத்தையும் சமூக நிலைத்தன்மையையும் நேரடியாக பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இதுவரை அரசானது மாவட்டத்தில் உள்ள நாட்டின கால்நடைகளுக்கு சட்டபூர்வமான வகையில் மேச்சல் தரைகளை ஒதுக்காதது துரதிஸ்ட மான நிலைமையாகும்.
நாட்டு மாடுகள் மூலம் கனிசமான பால் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப் படுவதுடன் 100 சத வீதம் மாவட்டத்தின் மாட்டிறைச்சி தேவையையும் பூர்த்தி செய்கிறது.
பால் உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை களுக்கு நாம் என்றும் எதிரானவர்கள் இல்லை. எமக்கு இருக்கும் கரிசனை நாட்டின கால்நடைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.மற்றும் எமது இயற்கை வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டும்.
இந்த நாட்டின கால் நடைகளைப் பாதுகாக்க அரசு வலுவான சில நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வினம் அழிந்து கொண்டு செல்கின்றது.இவை அழிந்தால்
இயற்கை சமநிலை சீர்குலையும் .
இறைச்சிக்கான தேவை அதிகரிக்கும்.
மந்த போசாக்கு ஏற்படும்.
சாதாரண பண்ணையாளர்களது வாழ்வாதாரம் இழக்கப்படும்.
இயற்கை விவசாயத்திற்கான உள்ளீடுகள் அற்றுப் போகும்.
இதுபோன்ற ஏராளமான பாதிப்புக்கள் ஏற்படும்.
தற்சமயம் இயங்கி வரும் இவ்வமைப்புகள் சமூக ஒற்றுமையையும், வாழ்வாதார நிலைத்தகு தன்மையையும் உறுதிப்படுத்தியுள்ள முக்கிய பொருளாதார அடித்தளங்களாக இருந்து வருகின்றன.
இந்நிலையில், அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள், ஏற்கனவே மேய்ச்சல் தரைக்காக போராடி வரும் பண்ணையாளர்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்செயற்பாடுகள் எதிர்காலத்தில் சுயாதீன அமைப்புகளை பலவீனப்படுத்தி பண்ணையாளர்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைக்கும்.
சமூக நீதி, ஜனநாயக மரபுகள் மற்றும் பக்கச்சார்பற்ற நிர்வாகக் கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலில், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எம்மால் வலியுறுத்தப்படுகிறது:
கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களில் அரசின் தேவையற்ற தலையீடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே ஏதாவதொரு சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் பண்ணையாளர்களைப் பிரித்தெடுத்து புதிய சங்கம் அமைக்கும் வேலையைக் கைவிட வேண்டும்.
பண்ணையாளர்கள் தாங்களே தங்களை நிர்வகிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜனநாயக மற்றும் பக்கச்சார்பற்ற அடிப்படையிலான நிர்வாக அமைப்புகளுக்கு அரசாங்க உறுதிப்பாடு வழங்க வேண்டும்.
முக்கியமாக, நீண்ட காலமாக நிலவி வரும் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வு வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடைவளர்ப்போர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம், பண்ணையாளர்களின் உரிமைகள், சமூக நலன் மற்றும் பொருளாதாரம் நிலைத்தகு த ன்மையை பாதுகாக்கும் தனது பொறுப்பை தொடர்ந்தும் உறுதியாக முன்னெடுத்து செல்லும் என்பதை இத்துடன் தெரிவித்துக்கொள்கிறது.
இப்படிக்கு
தலைவர்
தம்பிராசா நேமிஸ்வரன்
கால்நடை பண்ணையாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசம் மட்டக்களப்பு.